Skip to main content

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி.

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன.

திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல. 

வடமொழியில் திருக்கோலம் 'ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உண்டு. இடத்திற்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும்.

திருக்கோலங்கள் (ஆசனங்கள்) மூவகைப்படும்.
  1. நின்ற கோலம்
  2. அமர்ந்த கோலம் 
  3. கிடந்த கோலம்
நின்ற கோலம் இருவகைப்படும்
  1. ஸ்தானகம் - தலையும் உடலும் எப்பக்கமும் சாயாமல் நேராக நிமிர்ந்திருக்க, நேர் நோக்குடையதாய் அமைந்த கோலம்.
  2. ஸ்தானாசனம் - நின்ற கோலத்தை சார்ந்த ஸ்தானக அமைதிகள். தலை, உடல், கால்கள் வளைவு (பங்கம்) கொண்டிருக்கும்
அமர்ந்த கோலம் 'ஆசனம்' எனப்படும்

கிடந்த கோலம் இருவகைப்படும்
  1. சயனம்
  2. சயனாசனம் - கிடந்த கோலத்தை சார்ந்த ஸ்தானக அமைதிகள்

நின்ற கோலம் 

1. ஸ்தானகம்

1. சமபாத ஸ்தானகம் (பாதங்கள் முன்னோக்கி)

2. வைதஸ்திக ஸ்தானகம் (பாதங்கள் வேளி நோக்கி)

3. அர்த்த வைதஸ்திக ஸ்தானகம் (ஓரு பாதம் வெளி நோக்கி)

4. காயோத்சர்க்கம் (கைகள் உடல் பக்கத்தில் தொங்கும் ஜைன படிமம்)

2. ஸ்தானாசனம்

இரு கால்களையும் தரையில் ஊன்றிய கோலம்

1. வைசாக ஸ்தானகம் (வில்லுடன்)

2. வைஷ்ணவம் (வில் இன்றி)


ஓரு காலை தரையில் ஊன்றிய கோலம்

3. ஸ்வஸ்திகாசனம் (மற்ற கால் குறுக்காக)

4. ஊர்த்துவ ஜானு (மற்ற காலைத் தூக்கி வைத்து)

5. ஏக பாத ஸ்தானகம் (ஒற்றைக் கால் தவ நிலை)


பக்கவாட்டு போர்க்கோலங்கள்

6. ஆலீடாசனம் (அம்பு எய்தும் முன்)

7. பிரத்யாலீடாசனம் (அம்பு எய்திய பின்)

அமர்ந்த கோலம்

3. ஆசனம்

ஒரு காலைத் தொங்கவிட்டு (4)

1. சுகாசனம் (மற்ற காலை மடித்து பீடத்தின் மேல்)

2. வீராசனம் (மற்ற காலைத் தொங்கும் காலின் மீது வைத்து)

3. உத்குடிகாசனம் (மற்ற காலைப் பீடத்தின் மீது குத்திட்டு வைத்து)

4. அர்த்த யோகாசனம் - (உத்குடிகாசனம் யோக பட்டத்துடன்)


இரு கால்களையும் மடக்கிக் கிடத்தி (3)

5. பத்மாசனம் (இரு பாதங்களும் மேல் நோக்கி மலர்ந்து)

6. அர்த்த பத்மாசனம் (ஒரு பாதம் மட்டும் மேல் நோக்கி மலர்ந்து)

7. ராஜலிங்காசனம் (வலது கால் மேல் இடது கால்)


ஒரு காலைக் குத்தி வைத்து மறுகாலை மடக்கிக் கிடத்தி (2)

8. லளிதாசனம்

9. மகராஜ லீலாசனம் - (லளிதாசனத்தில் குத்தி வைத்த கால் மீது கை வைத்து)


இரு கால்களையும் குறுக்காக (2)

10. ஸ்வஸ்திகாசனம் (கால்களை குறுக்காக குத்தி வைத்து)

11. யோகாசனம் (ஸ்வஸ்திகாசனம் யோக பட்டத்துடன்)


வலது காலை மடக்கி இடது காலை ஊன்றி (1)

12. கருடாசனம் (ஒரு காலில் முழங்காலிட்டு, மறு காலை மடக்கி ஊன்றி)

கிடந்த கோலம் 

4. சயனம்


5. சயனாசனம்

1. சம சயனம் (சம மட்டத்தில் மல்லாந்து படுத்து)

2. அர்த்த சயனம் (சற்று ஒருக்களித்து படுத்து)


ஸ்தானகம், ஸ்தானாசனம், ஆசனம், சயனம், சயனாசனம் ஆகிய ஐவகை திருக்கோலங்கள் 'ஐந்தொழில்', 'பஞ்சகிருத்தியம்' என்று சிற்ப நூல்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த ஐவகை திருக்கோலங்களை தாண்டியும் படிமங்கள் அமையலாம். எடுத்துக்காட்டாக ஆடலரசன் படிமம். இது நாட்டிய கோலம்.

ஸ்தானகம்

1. சமபாத ஸ்தானகம் 


அமைதி:
  • இரு பாதங்களை சமமாக அருகருகே வைத்து நிற்கும் நிலை.
  • பாதங்கள் இரண்டும் முன் நோக்கி இருக்கும்.
  • தலையும் உடலும் எப்பக்கமும் சாயாமல் நேராக நிமிர்ந்திருக்க, நேர் நோக்குடையதாய் அமைந்த நிலை.
  • கால்களும் பாதங்களும் அருகருகே நெருங்கி இருக்கும், ஆனால் ஒட்டி இருக்காது.
  • கைகள் படிமத்திற்குரிய முத்திரைகள் ஏந்தி இருக்கலாம்.
எடுத்துக்காட்டுகள்

சந்திரசேகரர், பிரம்மா, திருமால், பைரவர், ஹரிஹரர் படிமங்கள்.


பிரம்மா, சிவபுரம்

திருமால், தாடகபுரீஸ்வரர் கோயில்,
மடம், திருவண்ணாமலை மாவட்டம்


பைரவர், குடந்தை

2. வைதஸ்திக ஸ்தானகம் 


அமைதி
  • சமபாத ஸ்தானகம் போன்றதே.
  • பாதங்கள் நேராக அமையாமல் வெளி நோக்கி அமையும்.
  • இரு பெருவிரல்களுக்கு இடையே இரு சாண் (ஓரு விதஸ்தி) இடைவெளி இருக்கும்.
எடுத்துக்காட்டு

??

3. அர்த்த வைதஸ்திக ஸ்தானகம் 


அமைதி
  • சமபாத ஸ்தானகம் போன்றதே.
  • ஒரு பாதம் நேராக அமைய, மற்ற பாதம் வெளி நோக்கி அமையும்.
  • இரு பெருவிரல்களுக்கு இடையே ஒரு சாண் இடைவெளி இருக்கும்.
எடுத்துக்காட்டு

??

4. காயோத் சர்க்கம் 


அமைதி
  • சமபாத ஸ்தானகம் போன்றதே.
  • கூடுதலாக இரு கைகளும் விரல்களும் இயல்பாக நீண்டு உடல் பக்கத்தில் தொங்க உள்ளங்கைகள் உடலை நோக்கியிருக்கும். கைகள் உடலைத் தொடாது சற்று விலகியிருக்கும். 
  • கைகள் முழங்கால்கள் வரை நீண்டிருக்கும் (அதனால், 'ஆஜானு லம்ப பாகு' - தமிழில் 'தாள் தாழ் தடக்கை' -  என்றும் பெயர் பெறும்)
பெயர்க்காரணம்

'காயோத் சர்க்கம்' என்பது உடல் பற்றுகளை முற்றும் துறந்தவர் என்பதைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டுகள்


ஜைன தீர்த்தங்கரர்கள், பாஹுபலி ஆகியோருக்கு உரியது. 

காயோத் சர்க்கம், பார்சுவநாதர், 23 ஆம் தீர்த்தங்கரர்
திறக்கோயில், திருவண்ணாமலை


ஸ்தானாசனம்

ஸ்தானகம்,ஸ்தானாசனம் இவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன? ஸ்தானகத்தில் பங்கம் எனும் உடல் வளைவுகள் இருக்காது. உடல்  எப்பக்கமும் சாயாமல் / வளையாமல் முற்றிலும் நேராக நிமிர்ந்திருக்கும். ஸ்தானாசனத்தில் உடல் வளைவு (பங்கம்) உண்டு.

இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
  1. இரு கால்களையும் தரையில் ஊன்றிய கோலங்கள்
  2. ஓரு காலை தரையில் ஊன்றிய கோலங்கள்
  3. பக்கவாட்டு போர்க்கோலங்கள்
அ. இரு கால்களையும் தரையில் ஊன்றிய கோலம்

இது இருவகைப்படும்

1. வைசாக ஸ்தானகம் (வில்லுடன்)
2. வைஷ்ணவம் (வில் இன்றி)

1. வைசாக ஸ்தானகம்


வைசாக ஸ்தானகம்


அமைதி
  • ஒரு காலை நன்றாக ஊன்றி மற்றொரு காலை இரண்டரை சாண் அளவில் தள்ளி வைத்த நிலை
  • உகந்த உடல் வளைவுகளுடன் (பங்கம்) கூடியது.

பெயர்க்காரணம்

  • விசாகம் விண்மீன் கூட்டங்களுள் ஒன்று. 
  • விசாக நாளில் தோன்றியவன் முருகன்.
  • விசாகன் = வில்லாளன், முருகன்
  • இது வில் ஏந்தி நிற்பதற்கான கோலம்.
  • இது முருகனுக்குரிய சிறப்புக் கோலம். விசாகனே இந்த கோலத்தின் அதி தேவதை.

எடுத்துக்காட்டுகள்


வில் ஏந்திய படிமங்கள். இந்த ஆசனத்தில் அமையும் இறைவர்கள் அவர்களது வில்லின் பெயரால் பெயர் பெறுவதும் உண்டு - முருகன், ராமன் (கோதண்டராமன்), திருமால் (சாரங்கபாணி), சிவன் (பினாகபாணி)


கோதண்டராமன், ராமசாமி கோயில், கும்பகோணம்


திரிபுராந்தகர், சென்னை அருங்காட்சியகம்
(கிடைத்தது: கொடும்பாளூர்)


2. வைஷ்ணவம்



அமைதி
  • ஒரு காலை நன்றாக ஊன்றி மற்றொரு காலை சிறிதே மடக்கி வைத்த நிலை.
  • இவ்வாறு ஒரு கால் நிலையாகவும் (ஸ்திரமாக) மறுகால் ௳டங்கியும் (குஞ்சிதமாக) இருப்பதால் இந்த ஆசனம் 'ஸ்தித குஞ்சிதம்' என்றும் அழைக்கப்படுகிறது.
  • உகந்த உடல் வளைவுகளுடன் (பங்கம்) கூடியது.
  • லளித நிலையைக் காட்டும்
பெயர்க்காரணம்

திருமால் இந்த கோலத்தின் அதி தேவதை. எனவே, இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

சிவன், திருமால், சக்தி. மற்ற இறைவர்கள் இறைவிகளின் படிமங்களில் சாத்வீக நிலையைக் குறிக்க இந்த ஆசனம் பயன்படுகிறது.

சீதை வைஷ்ணவ ஆசனத்தில்.
அவளது வலதுபுறம் மேலே கோதண்டபாணி வைசாக ஸ்தானகத்தில்
சீதையின் இடது காலருகில் ஒரு பெண் ஸ்வஸ்திகாசனத்தில்
ராமசாமி கோயில், கும்பகோணம்


துர்க்கை, சிவபுரம்


ஆ. ஓரு காலை தரையில் ஊன்றிய கோலங்கள்


இவை மூன்று வகை

3. ஸ்வஸ்திகாசனம்      (மற்ற கால் குறுக்காக)
4. ஊர்த்துவ ஜானு          (மற்ற காலைத் தூக்கி வைத்து)
5. ஏக பாத ஸ்தானகம்  (ஒற்றைக் கால் தவ நிலை) - இரு வகைகள்


3. ஸ்வஸ்திகாசனம் 



அமைதி
  • ஒரு காலை நிலையாக ஊன்றி மற்றொரு காலை அதற்கு குறுக்கே வைத்த நிலை.
  • உகந்த உடல் வளைவுகளுடன் (பங்கம்) கூடியது.
பெயர்க்காரணம்

செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகள் ஸ்வஸ்திக் சின்னம். 
அது போன்ற கால் அமைதியினால் வந்த பெயர். 

எடுத்துக்காட்டுகள்

குழலூதும் கண்ணன், கொடிப்பெண், ரிஷபாந்திக சிவன், அரிதாக வாயிற்காவலர்

வேணுகோபாலன்
ராமசாமி கோயில் குடந்தை

ரிஷபாந்திகர், திட்டிவாசல்,
அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

மகரத்தின் மீது கங்கை கொடிப்பெண்ணாக
ராமசாமி கோயில் குடந்தை

அரிட்டாப்பட்டி குடைவரை
(நன்றி: தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை)



4. ஊர்த்துவ ஜானு 


அமைதி
  • ஒரு காலை உறுதியாக கீழே ஊன்றி மற்ற காலை ஒரு பீடம், உயர்ந்த இடம் அல்லது உருவத்தின் மீது மடித்து வைத்து நின்ற நிலை

பெயர்க்காரணம்


'ஜானு' என்றால் வடமொழியில் முழங்கால்; 'ஊர்த்துவ' என்றால் மேலே. ஊர்த்துவ ஜானு = மேலே தூக்கிய முழங்கால்.

எடுத்துக்காட்டுகள்

  • நிலமகளை சுமந்தவாறு நிற்கும் வராகர்
  • மகிஷன் மீது ஒரு காலை ஊன்றி நிற்கும் துர்க்கை
  • தேர்த்தட்டின் மீது ஒரு காலை ஊன்றி நிற்கும் திரிபுராந்தகர்
  • கங்காதரர்

தாமரைப் பீடத்தின் மீது இடது காலை தூக்கி வைத்த வராகர்
பாதாமி 2 ஆம் குடைவரை

ம்கிடன் தலை மீது வலது காலை ஊன்றி நிற்கும் துர்க்கை
பல்லவர் காலம், சிங்கவரம் (செஞ்சி அருகில்)
வலது புறம் கருடாசனத்தில் அடியார்


கங்காதரர், லலிதாங்குர ஈஸ்வரம், திருச்சி, மகேந்திரவர்மன் குடைவரை
கீழே இருபுறமும் கருடாசனத்தில் அடியார்கள்
(Ms Sarah Welch, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

5அ. ஏக பாத ஸ்தானகம் - முதல் வகை

அமைதி
  • ஒரு காலை மடக்கி கீழே ஊன்றாமல் மேலே தூக்கி ஒரு காலை மட்டும் உறுதியாக கீழே ஊன்றி தவம் செய்யும் கோலம் ஏக பாத ஸ்தானகம். மடக்கிய காலின் பாதத்தை ஊன்றி இருக்கும் காலின் முழங்கால் மீது படிய வைத்து நிற்பது முதல் வகை
பெயர்க்காரணம்

ஏக பாத ஸ்தானகம் = ஒரு கால் நிற்கை

எடுத்துக்காட்டுகள்

தவம் செய்யும் அர்ச்சுனன்

அர்ஜுனனா? பகீரதனா? மாமல்லபுரம்
(Bernard Gagnon, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons படத்தில் இருந்து வெட்டப்பட்டது)

அர்ச்சுனன் தபஸ், குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு, சென்னை

5ஆ. ஏக பாத ஸ்தானகம் - இரண்டாம் வகை

அமைதி
  • ஏக பாத ஸ்தானகம் முதல் வகையைப் போன்றதே.  தூக்கிய காலை மேலும் நன்றாக மடக்கி மடித்து உள்ளங்கால் வானோக்கி அமைய பாதத்தை குய்யத்தில் வைத்த நிலை. (குய்யம் - ஆண்/பெண் குறி, ஆசனவாய், இவை உள்ள மறைவிடம்)
எடுத்துக்காட்டுகள்

தவம் செய்யும் அர்ச்சுனன், காமாட்சி

அர்ச்சுனன் தபஸ், திருச்செங்கோடு

தவக்கோல காமாட்சி 
(Elements of Hindu Iconography Vol 2 Part 2 -
T.A. Gopinatha Rao_0065)

இ. பக்கவாட்டு போர்க்கோலங்கள்

இவை இரண்டு வகை:

6. ஆலீடாசனம் (அம்பு எய்தும் முன்)
7. பிரத்யாலீடாசனம் (அம்பு எய்திய பின்)

6. ஆலீடாசனம் 


அமைதி
  • இடது காலை முன்னே எட்டி வைத்து வலது காலை பின்னோக்கி நீட்டி அம்பு எய்தும் நிற்கும் கோலம் 
  • இந்த நிலையில் இடது கையால் சிகர முத்திரையால் வில்லைப் பிடித்து, வலது கையில் கடக முத்திரை கொண்டு நாணையும் அதில் பொருத்திய அம்பையும் பின்னோக்கி இழுக்கும் நிலை.
எடுத்துக்காட்டுகள்

திரிபுராந்தக சிவன், நடுகல் வீரர்கள்

திரிபுராந்தக சிவன் ஆலீடாசனத்தில்
பாதாமி அருங்காட்சியகம்

தண்டராம்பட்டு நடுகல்


5. பிரத்யாலீடாசனம்


அமைதி

  • வில்லில் இருந்து அம்பை விடுத்த உடனே நிகழும் முன்னோக்கிப் பாய்ந்த கோலம் 
  • இந்த கோலத்தில் கைகளும் கால்களும் ஆலீடாசனத்தில் இருந்து மாறி அமையும்.
  • வில்லை இறுகப் பிடித்து, அம்பையும் நாணையும் விசையோடு பின்னோக்கி இழுத்துப் பிடித்து உடல் முழுதும் அந்த விசை பரவி நிற்கும் நிலை ஆலீடாசனம். அம்பை விடுத்தபின் அந்த விசையால் முன்னோக்கி உந்தப்படும் வில்லாளி தன்னை சமனிலைப் படுத்திக் கொள்ளும் கோலமே பிரத்யாலீடாசனம்.

எடுத்துக்காட்டுகள்

??


ஆசனம்

அமர்ந்த நிலை அமைதிகள் ஆசனங்கள் எனப்படுகின்றன. 12 வகை ஆசனங்களை கணபதி ஸ்தபதியார் தனது சிற்பச் செந்நூலில் விவரித்துள்ளார். அவற்றை கீழ்கண்ட ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. ஒரு காலைத் தொங்கவிட்ட வகை ஆசனங்கள் (4)
ஆ. இரு கால்களையும் மடக்கிக் கிடத்திய வகை ஆசனங்கள் (3)
இ. ஒரு காலைக் குத்தி வைத்து மறுகாலை மடக்கிக் கிடத்திய வகை ஆசனங்கள் (2)
ஈ. இரு கால்களையும் குறுக்காக வைத்த வகை ஆசனங்கள்(2)
உ. வலது காலை மடக்கி இடது காலை ஊன்றிய வகை ஆசனம் (1)


அ. ஒரு காலைத் தொங்கவிட்ட வகை ஆசனங்கள் (3)

1. சுகாசனம்
2. வீராசனம்
3. உத்குடிகாசனம்
4. அர்த்த யோகாசனம்

1. சுகாசனம்


அமைதி
  • ஒரு காலை காலை சுகமாகத் தொங்கவிட்டு மறு காலை ஆசனத்தின் மீது படுக்க வைத்து அமர்ந்திருக்கும் கோலம்.
  • தலையும் உடலும் எப்பக்கமும் சாயாமல் நேராக நிமிர்ந்திருக்க, நேர் நோக்குடையதாய் அமைந்த நிலை.
  • கைகள் சமச்சீராய் அமையும்.
  • எந்தக்கால் மடியும், எது தொங்கும்? - தனிச் சிற்பங்களில் குறிப்பிட்ட நியதி இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக வலது காலைதொங்க விட்டு இடது கால் மடிந்திருக்கும் என்றாலும் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடித்து வைத்துள்ள சிற்பங்களும் உண்டு. 
  • இறைவனும் இறைவியும் உடன் அமர்ந்திருக்கும் சிற்பங்களில் இறைவன் வலதுபுறமும் இறைவி இடதுபுறமும் அமர்வது மரபு. அப்போது இறைவனின் வலது கால் தொங்க இடது கால் மடிந்தும், இறைவியின் இடது கால் தொங்க வல்து கால் மடிந்தும் அமையும். எ.கா: உமாமகேசர் சோமாஸ்கந்தர்.
பெயர்க்காரணம்

காலைத் தொங்கவிட்டு சுகமாக அமர்ந்திருப்பதால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

அமர்ந்த நிலை இறை வடிவங்களுக்கான பொது ஆசனம்.  இந்த ஆசனத்தில் தனித்திருக்கையில் இறைவடிவம் 'சுகாசன' என்ற முன்னொட்டுடன் பெயர்பெறும்.

சுகாசன பிரம்மா - தக்கோலம்
இடது காலை தொங்கவிட்டுள்ளார்.

சுகாசன திருமால், சென்னை அருங்காட்சியகம்,
கோவையில் கிடைத்தது.
வலதுகாலை தொங்கவிட்டுள்ளார்.

சுகாசன காளி

சோமாஸ்கந்தர்
சாலர்ஜங்க் அருங்காட்சியகம், ஹைதராபாத்
(By Sailko - Own work, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=108849918)



2. வீராசனம்


அமைதி
  • ஒரு காலை தொங்கவிட்டு ஊன்றி மறு காலை விரைப்பாக அதன் மேல் படுக்கக் கிடத்தி நீட்டி அமர்ந்திருக்கும் கோலம்.
  • தலையும் உடலும் எப்பக்கமும் சாயாமல் விரைப்பாக நிமிர்ந்திருக்க, ராஜ நோக்குடையதாய் அமைந்த நிலை.
பெயர்க்காரணம்

அளப்பரிய ஆற்றலைக் குறிப்பதால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

தட்சிணாமூர்த்தி, ராஜராஜேஸ்வரி

தட்சிணாமூர்த்தி, சிவபுரம்

3. உத்குடிகாசனம்

உத்குடிகாசனம்

அமைதி
  • ஒரு காலை காலை தொங்கவிட்டு மறு காலை மடக்கி ஆசனத்தின் மீது ஊன்றி அமர்ந்திருக்கும் கோலம்.
எடுத்துக்காட்டுகள்
  • ஐயனார்
  • பரமபதநாதனாக திருமால்
  • தட்சிணாமூர்த்தி
ஐயனார், சென்னை அருங்காட்சியகம், 
(கிடைத்த இடம்: தெரியவில்லை)


தட்சிணாமூர்த்தி, சென்னை அருங்காட்சியகம்
(கிடைத்த இடம்: சோழமாளிகை, தஞ்சாவூர்)

தட்சிணாமூர்த்தி, தக்கோலம்

பரமபதநாதன், செஞ்சி பனம்பாக்கம்


4. அர்த்த யோகாசனம்

அமைதி

உத்குடிகாசனத்தில் மடக்கிய காலையும் உடலையும் யோக பட்டத்தால் கட்டி இருக்கும் நிலை

பெயர்க்காரணம்

யோகாசனத்தில் இரு கால்களும் உடலோடு கட்டப்பட்டிருக்க, இங்கு ஒரு கால் மட்டும் கட்டப்பட்டிருப்பதால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்
  • ஐயனார்
  • யோக தட்சிணாமூர்த்தி
யோக தட்சிணாமூர்த்தி, சென்னை அருங்காட்சியகம்
(கிடைத்த இடம் - காவேரிப்பாக்கம், வ.ஆ.)


ஆ. இரு கால்களையும் மடக்கிக் கிடத்திய வகை ஆசனங்கள் (3)

5. பத்மாசனம்
6. அர்த்த பத்மாசனம்
7. ராஜலிங்காசனம்

5. பத்மாசனம்


அமைதி
  • உடல் வளைவுகள் இன்றி நேராக நிமிர்ந்திருக்க இரு உள்ளங்கால்களும் மேல் நோக்கியிருக்குமாறு  பாதங்களை ஒன்றுக்கொன்று குறுக்காக தொடை மீது கிடத்தி அமர்ந்திருக்கும் கோலம்.
பெயர்க்காரணம்
  • பத்மம் = தாமரை. பாதத் தாமரைகள் மலர்ந்திருப்பது. இது 'கமலாசனம்' என்றும் அழைக்கப்படும் (கமலம் = தாமரை).
  • பௌத்த மரபில் 'பரியங்காசனம்' என்றும் , 'வஜ்ராசனம்' என்றும் சமண மரபில் 'பல்லியங்காசனம்' என்றும் பெயர் பெறும். பரியங்கம் = படுக்கை. இரு பாதங்களும் படுக்கையாக கிடத்தப் படுவதால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்
  • புத்தர், தீர்த்தங்கரர், 
புத்தர் குஷான் கால காந்தாரக் கலை
Carnegie Museum of Art, Pittsburgh, 
(Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons)

தீர்த்தங்கரர், புழல், சென்னை


6. அர்த்த பத்மாசனம்

அமைதி
  • உடல் வளைவுகள் இன்றி நேராக நிமிர்ந்திருக்க, இடது காலை பீடத்தில் மடக்கிக் கிடத்தி, வலது காலை மடக்கி  அதன் பாதத்தை இடது தொடை மீது கிடத்தி அமர்ந்திருக்கும் கோலம். 
பெயர்க்காரணம்
  • ஒரு பாதத் தாமரை மட்டும் மலர்ந்திருப்பதால் இப்பெயர்
  • இது பௌத்த மரபில் 'அர்த்த பரியங்காசனம்' என்றும் சமண மரபில் 'அர்த்த பல்லியங்காசனம்' என்றும் அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்
  • அமர்ந்த நிலை புத்தர், தீர்த்தங்கரர், தேவி படிமங்கள்.

சரஸ்வதி, கங்கை கொண்ட சோழபுரம்
(Based on Wikipedia content that has been edited  - Amar, CC BY-SA 2.5 <https://creativecommons.org/licenses/by-sa/2.5>, via Wikimedia Commons)

புத்தர், கணிகிளுப்பை

ரிஷபநாதர், எய்யில்


7. ராஜலிங்காசனம்


அமைதி
  • வலது காலை மடக்கி  அதன் பாதத்தை குய்யத்தோடு ஒட்ட அமைத்து இடது காலின் பரடை வலது தொடை மீது ஏற்றி பிகுவாக அமைத்து அமர்ந்திருக்கும் கோலம். 
  • உடல் வளைவுகள் இன்றி நேராக நிமிர்ந்திருக்கும்.
  • இந்த ஆசனம் வீராசனத்தோடு தொடர்புடையது. வீராசனத்தில் பீடத்தில் இருந்து கீழே தொங்கும் வலது காலை மடித்து இடது காலின் கீழ் வைப்பதே ராஜலிங்காசனம். வீராசனத்திற்கும் ராஜலிங்காசனம் என்ற பெயர் உண்டு.
பெயர்க்காரணம்

ஒப்பற்ற தலைவன் அல்லது அரசனைக் குறிக்கும் கோலமாதலால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

அமர்ந்த நிலை திருவள்ளுவர்.


திருவள்ளுவர், வள்ளுவர் கோட்டம், சென்னை
(https://chennai.nic.in/ta/gallery/வள்ளுவர் கோட்டம்)


இ. ஒரு காலைக் குத்தி வைத்து மறுகாலை மடக்கிக் கிடத்திய வகை
ஆசனங்கள் (2)

8. லளிதாசனம்
9. மகராஜ லீலாசனம்

8. லளிதாசனம்

அமைதி
  • ஒரு காலை மடக்கி  பீடத்தின் மீது கிடத்தி வைத்து, மற்ற காலை மடக்கி பீடத்தின் மீது நிறுத்தி வைத்து  அமர்ந்திருக்கும் கோலம். 
பெயர்க்காரணம்
  • லளிதம் = அழகு.
எடுத்துக்காட்டுகள்
  • விநாயகர்.

விநாயகர் - சென்னை அருங்காட்சியகம்
(கிடைத்த இடம் - காவேரிப்பாக்கம் வ.ஆ)


8. மகராஜ லீலாசனம்


அமைதி
  • லளிதாசனக் கோலத்தில் மடித்துத் தூக்கி நிறுத்திய முழங்கால் மீது முழங்கையை லளிதமாக வைத்து அமர்ந்திருக்கும் கோலம். 
  • முழங்கால் மீது வைத்திருக்கும் கை நீண்டிருக்கலாம் அல்லது மார்பை நோக்கி மடிந்து அமைந்திருக்கலாம்.
  • இடது கையை பக்கவாட்டில் பீடத்தின் மீது ஒய்யாரமாக ஊன்றி அமர்ந்திருக்கும் நிலை.
எடுத்துக்காட்டுகள்

  • ஐயனார்
  • பரமபதநாதனாகிய திருமால் (வழக்கமாக உத்குடிகாசனம்)
  • பௌத்த சிம்மநாத படிமம்

திருமால், பாதாமி 2 ஆம் குடைவரை

சிம்மநாத அவலோகிதேஸ்வரர்
திபெத்திய பௌத்த படிமம்
காலம் 11 ஆம் நூற்றாண்டு
(நன்றி: https://www.himalayanart.org/items/12481)


ஈ. இரு கால்களையும் குறுக்காக வைத்த வகை ஆசனங்கள்(2)

9. ஸ்வஸ்திகாசனம்
10. யோகாசனம்

9. ஸ்வஸ்திகாசனம்


அமைதி
  • கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக - சிக்கு பலகையைப் போல - வைத்திருக்கும் கோலம்.
  • பாதங்கள் மற்ற கால் தொடையின் கீழே இருக்கும். 
பெயர்க்காரணம்

செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகள் ஸ்வஸ்திக் சின்னம்.  அது போன்ற கால் அமைதியினால் வந்த பெயர். 

ஸ்வஸ்திக்
சிக்குப் பலகை

எடுத்துக்காட்டு

சித்தர் ஸ்வஸ்திகாசனத்தில்.


10. யோகாசனம்


அமைதி
  • ஸ்வஸ்திகாசனத்தில் மடக்கிய கால்களையும் உடலையும் 'யோக பட்டம்' என்னும் பட்டியால் கட்டி அமர்ந்த கோலம்.
பெயர்க்காரணம்
  •  யோக நிலைக்கான ஆசனம் ஆதலால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

யோக நரசிம்மர், அய்யப்பன்

யோக நரசிம்மர், அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை


உ. வலது காலை மடக்கி இடது காலை ஊன்றிய வகை ஆசனம் (1)

11. கருடாசனம்

அமைதி
  • வலது காலை மடக்கி முழங்காலை கீழே படிய வைத்து, இடது காலை மடக்கி ஊன்றிய அல்லது சிறிது நீட்டியமைத்த கோலம்.
பெயர்க்காரணம்
  •  இது கருடனுக்கான சிறப்பு ஆசனம் ஆதலால் இப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

கருடன், பணிந்து நிற்கும் அடியவர்

கருடாசனம்
(நெடுங்குன்றம் தூண் சிற்பம்)

அடியவர் கருடாசனத்தில்
(சென்னை அருங்காட்சியகம்)

கருடாசனத்தில் இறக்கைகளை விரித்து கைத்தலங்கள் வானோக்கி அமைய கருடன் பறக்கும் நிலையை உணர்த்துவது 'கமனக்கோலம்' எனப்படும்.

கருடன் கமனக்கோலத்தில்
(Hyougushi / Hideyuki KAMON from National Museum in Delhi, India, CC BY-SA 2.0 <https://creativecommons.org/licenses/by-sa/2.0>, via Wikimedia Commons)

கிடந்த கோலம்

சயனம்

அமைதி

கால்களையும் கைகளையும் நீட்டிஉடலையும் தலையையும் பீடத்தில் கிடத்திப் படுத்த நிலை.

பெயர்க்காரணம்

சயனம் = படுத்திருக்கை, தூக்கம்

எடுத்துக்காட்டு

??

சயனாசனம்

சயனாசனம் இருவகைப்படும்.
  1. சம சயனம்
  2. அர்த்த சயனம்
1. சம சயனம்

அமைதி

படுக்கையின் மீது உடலையையும் தலையையும் கிடத்தி, கால்களையும் கைகளையும் நீட்டி, கண்களை மூடி, சமமட்டத்தில் மல்லாந்து படுத்த கோலம்.

பெயர்க்காரணம்

சமமான நிலையில் படுப்பது.

எடுத்துக்காட்டு

தென் இந்தியாவில் அரிது. அபிசாரிக சயன திருமால் வடிவத்திற்கு உரியது. எ.கா -  மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். 

மகாபலிபுரம் கடற்கரைக் கோயில்

வட இந்தியாவில் திருமால் வடிவம் சமசயன நிலையில் பரவலாகக் காணப்படுகிறது. 

சம சயன திருமால்
பூடாநீலகண்டர் கோயில் (बूढानीलकण्ठ मन्दिर) நேபாளம்

2. அர்த்த சயனம்

அமைதி
  • சற்று ஒருக்களித்துப் படுத்த கோலம். 
  • வலது கை - தலையணை மீது வைத்து அல்லது நீட்டி மகுடத்தைத் தொட்டு
  • இடது கை - சிறிது வளைந்து இடது தொடை மீது நீட்டி அல்லது முழங்கையை இடுப்பருகே அமைந்து
  • வலது கால் - நீட்டி
  • இடது கால - சிறிது மடங்கி (குஞ்சிதமாக)
  • முகம் - வல்து பக்கம் சற்று (மூன்று விரலளவு) ஒருக்களித்து
பெயர்க்காரணம்

சற்று ஒருகளித்த நிலையில் படுப்பது. அர்த்தார்த்த சயனம் என்றும் பெயருண்டு.

எடுத்துக்காட்டு

போக, யோக, வீர சயன திருமால் வடிவங்களுக்கு உரியது.

அர்த்த சயனம்
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் 

சிற்பச் செந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள மேற்கண்ட இலக்கணங்களுக்குள் அடங்காத கோலங்கள் உள்ளன. எடுத்துகாட்டாக, பறக்கும் நிலையில் உள்ள கந்தர்வர், கின்னரர், சரபேஸ்வரர் முதலியன.

பிரலம்ப பாதாசனம்

இரு கால்களையும் தொங்கவிட்டு இரு பாதங்களையும் தரையில் ஊன்றி அமர்ந்திருக்கும் ஆசனம் சிற்பச் செந்நூலில் விவரிக்கப்படவில்லை. இது தவ்வைக்குரிய ஓரே ஆசனம். சப்த கன்னியர், மற்ற தேவியரும் இவ்வகையாக அமர்வது உண்டு. 

தவ்வை
நெடுங்குணம் தீர்காசலேசுவரர் கோயில்

இவ்வகை ஆசனம் பௌத்த சிற்பக் கலையில் 'பிரலம்பபாத ஆசனம்' என்று அழைக்கப்படுகிறது.

புத்தர்  - பிரலம்ப பாதாசனம்
கான்ஹேரி குடைவரை - சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மும்பை

ஆசனங்களின் தமிழ்ப் பெயர்கள்

கலைச்செம்மல் கோ திருஞானம் தமது 'உருவக்கோடுகள்' என்னும் நூலில் ஆசனங்களின் வடமொழிப் பெயர்களைத் தமிழ்படுத்தியுள்ளார்.

ஸ்தானகம்

நின்ற கோலம்

1. சமபாத ஸ்தானகம் 

2. வைதஸ்திக ஸ்தானகம் 

3. அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்

4. காயோத்சர்க்கம் 

சம நிற்கை

விரி நிற்கை

அரை விரி நிற்கை

தாழ் தடக்கை

ஸ்தானாசனம் 

நின்ற கோல சார்புடைய அமைதிகள்

இரு கால்களையும் தரையில் ஊன்றிய கோலம்

1. வைசாக ஸ்தானகம் 

2. வைஷ்ணவம்


ஓரு காலை தரையில் ஊன்றிய கோலம்

3. ஸ்வஸ்திகாசனம் 

4. ஊர்த்துவ ஜானு 

5. ஏக பாத ஸ்தானகம்


பக்கவாட்டு போர்க்கோலங்கள்

6. ஆலீடாசனம்

7. பிரத்யாலீடாசனம் 



சாய்வு நிற்கை

சிறு சாய்வு நிற்கை




குறுக்கு நிற்கை

தூக்கிய முழங்கால்

ஒருகால் நிற்கை



ஓடு நிற்கை

விரைவோடு நிற்கை

ஆசனம் 

அமர்ந்த கோலம்

ஒரு காலைத் தொங்கவிட்டு (4)

1. சுகாசனம்

2. வீராசனம்

3. உத்குடிகாசனம் 

4. அர்த்த யோகாசனம்


இரு கால்களையும் மடக்கிக் கிடத்தி (3)

5. பத்மாசனம் 

6. அர்த்த பத்மாசனம் 

7. ராஜலிங்காசனம்


ஒரு காலைக் குத்தி வைத்து மறுகாலை மடக்கிக் கிடத்தி (2)

8. லளிதாசனம்

9. மகராஜ லீலாசனம்


இரு கால்களையும் குறுக்காக (2)

10. ஸ்வஸ்திகாசனம் 

11. யோகாசனம் 


வலது காலை மடக்கி இடது காலை ஊன்றி (1)

12. கருடாசனம்


நேரமர்வு

வீரமர்வு

மண்டலமர்வு

அரை ஓகவமர்வு




தாமரை அமர்வு

செம்பாதித் தாமரை அமர்வு

அரசமர்வு




அழகமர்வு

பேரரசமர்வு



குறுக்கமர்வு

ஓகவமர்வு




கருடமர்வு

சயனம்

சயனாசனம்

கிடந்த கோலம்

1. சம சயனம் 

2. அர்த்த சயனம்

 அர்தார்தாசனம் 

சம கிடக்கை

அரை கிடக்கை

குறை கிடக்கை



நன்றிக்கடன்:
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • கோ. திருஞானம்; உருவக்கோடுகள்; 1998
பின் குறிப்பு:

சாமரங்கன சூத்ரதாரா என்னும் வட இந்திய வாஸ்து நூல் 11 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பட்டது .அதன் ஆசிரியராக பராமர அரசன் போஜன் கருதப்படுகிறார். அந்த நூலில் ஆறுவகை கால ஆசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவையும் அவற்றிற்கு இணையான மேற்கண்ட ஆசனங்களும் - 

  • வைஷ்ணவம் - சுகாசனம்
  • சமபாதம் - சமபாத ஸ்தானகம்
  • ஆலீடம் - ஊர்த்துவ ஜானு, ஆலீடாசனம்
  • பிரத்யாலீடம் - பிரத்யாலீடாசனம்
  • வைசாகம் - விசாகம்
  • மண்டலம் - வைதஸ்திக ஸ்தானகம்
நன்றி: BHU Swayam - Iconography of Major Hindu Deities

Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...